இந்திய மெட்ரோபாலிட்டன் நகரங்கள் என்று அழைக்கப்படும் நகரங்களில் செல்வம் பெருகும் அதே வேளையில் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும் அதிகரித்து வருவதாக சமீபத்தில் மகாராஷ்ட்ரா மேல்சபையில் வெளியிடப்பட்ட தகவலைக் கொண்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக இந்தியாவின் நிதித் தலை நகர் என்று அழைக்கப்படும் மும்பையில் ஒருபுறம் சிலரிடத்தில் செல்வ வளம் பெருகுகிறது. அதே வேளையில் பட்டினியும் ஊட்டச்சத்தின்மையும் பெருகுகிறது என்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மேல்சபையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. . அதாவது 4000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் யஷோமதி தாக்கூர் இந்தத் தகவலை மேல்சபையில் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.சி. பாய் ஜத்தாப் எழுப்பிய கேள்விக்கு இந்தப் பதிலை அளித்துள்ளார் யஷோமதி. மும்பை நகரில் 4194 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அவதியுறுவதாக அவர் தெரிவித்தார்.இதில் பெரும்பாலும் தாராவி, மல்வானி, மங்குர்த் பகுதிகளில்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2016 கணக்கின் படியே மகாராஷ்டிராவில் ஷெட்யூல்ட் ட்ரைப் என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களில் 61% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பழங்குடி குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையினாலும் பட்டினியினாலும் இறந்து வருவதாகவும் அப்போதே செய்திகள் வெளியாகின.
தானேயில் கேட்கவே வேண்டாம், ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பட்டினிச்சாவுகளும் ஏற்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தானே ஊரகப் பகுதிகளில் பழங்குடி மக்கள் அதிகம், பரம ஏழ்மை அங்கு தலைவிரித்தாடுகிறது.இங்கு நீண்ட கால ஊட்டச்சத்தின்மை மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை பிரச்சனை இருந்து வருகிறது. எனவே எலும்புக்கூடு போல் குழந்தைகள் ஆவது இங்கு ஒன்றும் புதிதல்ல என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க தாயாரிடம் சத்து இல்லை. பால், மற்றும் பிற ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் இங்கு வருவதில்லை. தானே பழங்குடி ஏழ்மை பகுதியில் 1531 குழந்தைகள் மிதமாக ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், 122 குழந்தைகளுக்கு கடும் ஊட்டச்சத்தின்மை.
உணவுப்பொருள் விலையேற்றத்தால் கடும் பாதிப்பு:
மும்பையை அடுத்துள்ள பால்கர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் மற்றும் 30,000 கருத்தரித்த தாய்மார்கள் மற்றும் குழந்தை பெற்று குழந்தைக்கு பால் கொடுக்கும் காலக்கட்டத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு அங்கன்வாடிகள் மூலம் உணவு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தத் திட்டம் கடந்த ஒரு மாதகாலமாக நிறுத்தப்பட்டுள்ளது, காரணம், உணவுப்பொருட்களின் விலை வானளாவ அதிகரித்திருப்பதே. இவர்களுக்கு அரசு கொடுக்கும் பணமும் மிக மிக குறைவு. அதனால் சமையலை நிறுத்தி விட்டனர்.
ஒருபுள்ளி விவரத்தின் படி 2,700க்கும் அதிகமான அங்கன்வாடிகளில் சுமார் 1800 அங்கன்வாடிகள் உணவு சமைப்பதை நிறுத்தி விட்டன. பணவீக்க அதிகரிப்பால் குழந்தை ஒன்றிற்கு ரூ.6, தாய்மார் ஒருவருக்கு ரூ.35 என்று வழங்குவது போதவே போதாது என்கின்றனர் சமூக தொண்டர்கள். சமையல் எரிவாயு, உணவு தானியங்கள் மற்றும் காய் கறி விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. இதனால் ஏழைகளுக்கு சாப்பாடு கட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children, Maharashtra, Mumbai, National Nutrition Survey