சீன குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாவை இந்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக சர்வதேச விமான சேவை அமைப்பான IATA தெரிவித்துள்ளது. சீன பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சுமார் 22,000-ம் இந்திய மாணவர்கள் சீனாவுக்கு திரும்பி சென்று கல்வி தொடர விசா அனுமதி வழங்க வேண்டும் என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்திய அரசின் இந்த கோரிக்கையை சீனா கண்டுகொள்ளாத நிலையில், அதற்கு பதிலடி வழங்கும் விதமாக இந்தியா, சீன மக்களுக்கு வழங்கி வந்த டூரிஸ்ட் விசாவை சஸ்பெண்ட் செய்துள்ளது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய நிலையில், சீனாவில் படித்து வந்த சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மீண்டும் சீனாவில் உயர் கல்வியை தொடர அந்நாட்டு அரசு விசா வழங்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் தொடர்ந்து பல மாதங்களாக வலியுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கடந்த மாதம் அளித்த பேட்டியில், "சீனா அரசு தொடர்ந்து விசா வழங்க மறுத்துவருவதால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், இதுவரை சீன தரப்பில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இடம் இந்த கோரிக்கையை வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் முன்வைத்தார்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க:
11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆறு சிறார்கள் கைது
இந்திய அரசின் நீண்ட கால கோரிக்கையை இதுவரை சீனா ஏற்காததை தொடர்ந்து இந்தியா இந்த பதில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய மாணவர்களை அனுமதிக்காத அதேவேளை, தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை மாணவர்களை சீனா திரும்ப அழைத்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று குறைந்துள்ளதை அடுத்து கடந்த மாதம் இந்திய அரசு சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கியது. அத்துடன் 156 நாடுகளுக்கு இணைய வழியில் டூரிஸ்ட் விசா வழங்கும் சேவையையும் மீண்டும் அமல்படுத்தியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.