மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.56 கோடி ரொக்கம், 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை எண்ணி முடிக்க 13 மணி நேரம் தேவைப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா என்ற பகுதியில் பிரபல உருக்கு, ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் இரு தொழில் குழுமங்களின் உரிமையாளர்களிடம் கணக்கில் காட்டாத பணம் மற்றும் சொத்து இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து 120க்கும் மேற்பட்ட வாகனங்களில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்த தொழிலதிபர்களின் வீட்டிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகை, பினாமி சொத்துக்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ரெய்டில் சிக்கிய பணத்தை தீவிரமாக எண்ணும் அதிகாரிகள்
பிடிபட்ட ரொக்கத்தை எண்ணுவதற்கு சுமார் 13 மணி நேரம் தேவைப்பட்டதாக கூறிய வருமான வரித்துறை, ‘ சோதனையில் மொத்தம் ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்கம், ரூ.390 கோடி மதிப்பில் பினாமி சொத்துக்களுக்கான ஆவணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த சோதனையில் வைரம், முத்து போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டன’ என தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அவரது கூட்டாளி, உத்தரப் பிரதேச தொழிலதிபர் பியூஷ் ஜெயின், தமிழ்நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு பெருமளவில் பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.