மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவற்றுக்கான அமைச்சகம் வேறு நாடுகளில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வளர்ப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது.
இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து விலங்குகளை இறக்குமதி செய்து அவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தொடர்பாக கடுமையான விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் வகுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்
இந்த புதிய வழிகாட்டுதலின் படி, புதிய உத்தரவானது, வனவிலங்குகள் வர்த்தகத்தை நிர்வகிக்கும் செய்யும் சர்வதேச அமைப்பான CITES (காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாடு) அமைப்பின் கீழ் உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். அதேவேளை 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களுக்கு இது பொருந்தாது.
இந்த புதிய உத்தரவின் படி, வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் விலங்குகளின் விவரத்தை தமாக முன்வந்து தெரிவிக்கலாம். அவர்களின் விலங்குகள் முறையாக பதிவு செய்யபப்ட்டு, மேற்படி ஏற்றுமதி மற்றும் விற்பனைக்கு வழிவகை செய்யப்படும்.
இந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டு முதல் ஆறு மாத காலத்தில் வாங்கிய வெளிநாட்டு விலங்குகளுக்கு உரிமையாளர்கள் ஆவணங்கள் சமர்பிக்கத் தேவையில்லை. வழிகாட்டுதல் வழங்கி ஆறு மாதங்களுக்குப் பின் பதிவு செய்யும் நபர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
இதன் மூலம் வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் உரிய பரமாரிப்பு மேற்கொள்வதற்கும், மற்ற பாதுகாப்பு அம்சங்களை முறையாக பேனுவதற்கும் சிறந்த சூழல் உருவாக்கப்படும். மேலும், விலங்குகளின் முழு தரவுகள் அரசிடம் இருக்கும் பட்சத்தில், விலங்குகள் மூலம் நோய்கள் பரவும் காலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நலனை பாதுகாக்க வழிகாட்டுதல்கள் வழங்குவது எளிதாக இருக்கும்.
உரிமையாளர் தனது வளர்க்கும் விலங்கின் விவரத்தை பதிவு செய்தப் பின், மாநிலத்தின் தலைமை வனத்துறை வார்டன் நேரில் வந்து விலங்கை சரிபார்ப்பார்.பின்னர் பதிவு செய்யப்பட்டதற்கான அவணம் உரிமையாளருக்கு வழங்கப்படும். மேலும், விலங்கை ஆய்வு செய்வதற்கு வனத்துறை வார்டன் அல்லது அதிகாரிகளுக்கு எப்போதும் அதிகாரம் உண்டு. அதேபோல், விலங்கை விற்றாலோ, அது உயிரிழந்தாலோ அல்லது உரிமையாளரை மாற்றினலோ, இது தொடர்பான தகவலை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வார்டனுக்கு தெரிவிக்க வேண்டும்.
இனி வரும் காலத்தில் எந்த நபராவது வெளிநாட்டு விலங்கை இறக்குமதி செய்து வளர்க்க விரும்பினால், அவர்கள் வெளிநாட்டு வர்த்த இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய வகையில் உரிமம் பெற வேண்டும்.மேலும், தனது விண்ணப்ப படிவத்தை காட்டி மாநில வனத்துறை வார்டனிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
சட்டத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்:
* இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டு விலங்குகளை பதுவு செய்வதற்கான காலம் கடந்த வருடம் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஒரு ஆங்கில இணையத்தின் புள்ளி விவரத்தின்படி, நீட்டிக்கப்பட்ட இந்த காலத்தில் சுமார் 30,000 ற்கும் மேலான இந்தியர்கள் தங்கள் செல்ல பிராணிகளை பதிவு செய்துள்ளனர்.
* மேலும், இந்த விதிகள், அந்த செல்லபிராணிகளின் மருத்துவ நலன்களையும், அதற்கு ஏற்ற அமைப்பையும் கண்காணித்து முழுவதுமாக வழிகாட்ட உதவும் என தெரிவிக்கிறது.
* அதுமட்டுமின்றி அந்த விலங்குகளின் புள்ளி விவரங்கள் இருப்பதால், ஏதேனினும் புதிய நோய் வருமெனில், தக்க நேரத்தில் அந்த செல்ல பிராணிகளும், மனிதர்களும் பாதிக்கபடாத படி அவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கும்.
* மேலும் தற்போது வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் மூலம் நடந்து வருவதாகவும், மாநில வனத்துறை இந்த நடைமுறையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் அந்த ஆங்கில நாளிதலில் பேட்டியளித்த இந்திய வனவிலங்கு அறக்கட்டளைக்கான வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு தலைவர் ஜோஸ் லூயிஸ், “வனவிலங்கு வர்த்தகத்தில் இந்த விதிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த மாதிரியான வெளிநாட்டு செல்லபிராணிகள் ஆதிக்கம் செலுத்தினால், சுற்றுசூழல் அமைப்பில் சமநிலை தவறவும் வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
* இந்த செல்ல பிராணிகளை ஆய்வு செய்வதற்கான உரிமைகளை மாநில வனத்துறைக்கும் உரிமை அளித்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் இதை கஸ்டம்ஸ் அதிகாரிகள் மட்டுமே CITES விதிகளின் படி இறக்குமதி செய்யப்படுகிறதா என ஆய்வு செய்வர். இவர்களின் எல்லையை கடந்து வந்தபின் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு இதை ஆய்வு செய்ய உரிமையில்லை.
*“செல்ல பிராணிகள் கடைகளிலும் இதற்கு முன்னர் வனத்துறை தன் அதிகாரத்தை செலுத்த முடியாது. அந்த பிராணிகள் வெளிநாட்டு உயிரினங்கள் எனவும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் இந்த விலங்குகள் வராது என்றும் வணிகர்கள் கூறி வந்தனர். சட்டத்திற்கு எதிராக கடத்தி வரப்படும் இந்த வர்த்தகத்தை தடுக்க இது நிச்சயம் தேவையான விதியாகும்” என தெரிவித்தார்.
இந்தியாவில் இருக்கும் விலங்குகள் கடத்தல்:
இத்தனை விதிகள் இருந்தாலும், வனவிலங்குகள் கடத்தல் இன்னும் தொடர்கிறது என ஒரு ஆங்கில நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் வடக்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இரண்டு பகுதிகளிலிருந்து 3 கங்காருக்கள் மீட்கப்பட்டன. இந்த கங்காருக்கள் எப்படி நாட்டிற்குள் வந்தது என அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகிறார்கள் .
மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்(1972), CITESயின் இடம்பெற்றுள்ள 1800 வகையான செடிகள், விலங்குகள், மற்றும் அதன் பொருட்களின் வர்த்தகத்தை தடை செய்கிறது. இந்த நிறுவனத்தின் படி, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், அதிகம் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதால், பல முறை இந்த சட்டம் சரியாக பயன்படாமல் போகிறது.
வனவிலங்கு சட்டம் இன்னும் சரியாக பயன்படுத்தப்படவேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. மேலும் இந்தியாவில் இந்த சட்டம் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், இதில் கடுமை காட்டாதது தான் கடத்தல்காரர்கள் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்கிறார்கள்.
உலக வனவிலங்கு நிதியின் புள்ளிவிவரத்தின் படி, ஒரு வருடத்தில் இந்த வனவிலங்கு கடத்தலால் ரூ.1500 கோடி வர்த்தகம் நடக்கிறது. இது உலகில் நடக்கும் குற்றங்களில் நான்காவது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகும். இந்தியா CITESயில் ஒரு உறுப்பினராக இருந்தாலும், வனவிலங்கு கடத்தலில், முதல் 20 இடங்களில் இருக்கிறது. மேலும் வான்வழி கடத்தலில் இந்தியா முதல் 10 இடங்களில் இருக்கிறது.
மேலும், 2020 உலக வனவிலங்கு அறிக்கையின்படி, 1999 முதல் 2018 காலகட்டத்தில், 6000 வகையான வெவ்வேறு இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்பதால் உலகம் முழுவதும் நடக்கும் குற்றம் என்றே தெரியவருகிறது.
சமீபத்தில் வெளியான TRAFFIC என்ற அமைப்பின் ஆய்வில், 2011 முதல் 2018 வரையில், 18 இந்திய விமான நிலையங்களில் சுமார் 70,000ற்கும் அதிகமான விலங்குகளும் அதன் வழிதோன்றல்களும் வனவிலங்கு கடத்தலின் போது பிடிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Animal activism, Pet Animal, Wild Animal