பெங்களூரு மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் தனது மனைவியும் இரண்டரை வயது மகனும் உயிரிழந்ததை அடுத்து, "நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்" என்று விபத்தில் தப்பிய லோஹித் குமார் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எச்.பி.ஆர் லேஅவுட் அருகே உள்ள வெளிவட்ட சாலையில் மெட்ரோ போடுவதற்காக போட்ட தூண் ஒன்று இடிந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை தாய் இரண்டு குழந்தைகள் மீது விழுந்துள்ளது. அதில் தாய் தேஜஸ்வினி (28) மற்றும் அவரது இரண்டரை வயது மகன் விஹான் ஆகியோர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டனர். இந்த சம்பவத்தில் தந்தை லோஹித் மற்றும் மற்றொரு குழந்தை உயிர் தப்பினர்.
இந்நிலையில் லோஹித், “என்னுடன் எனது மனைவி மற்றும் குழந்தைகளும் பைக்கில் பயணம் செய்தனர். நான் அவர்களை என் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இறக்கிவிட இருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது. நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்" என்று வருந்தினார். மேலும் "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.
“மெட்ரோ தூண் கட்டுமானத்திற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் தெளிவாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,'' என லோஹித்தின் தந்தை செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து கேட்டதும் மிகவும் வருந்தினேன். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை கண்டறிந்து இழப்பீடு வழங்குவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார். மேலும் அவர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதோடு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் சார்பில் ஒரு உள்தொழில்நுட்ப குழு இந்த விஷயம் குறித்து விசாரிக்கும். அது மட்டும் இன்றி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பின்னர் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (பிஎம்ஆர்சிஎல்) நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டுமானம் என்று வரும்போது நாங்கள் மிக உயர்ந்த தரத்தை பின்பற்றுகிறோம். விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, இது தொழில்நுட்பப் பிழையா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா எனப் ஆராயப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
லோஹித்தின் புகாரின் அடிப்படையில் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று பெங்களூரு கிழக்கு காவல் துறை துணை ஆணையர் பீமாசங்கர் எஸ் குலேத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) குழுவின் அறிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் கட்டுமானத்தில் ஏதேனும் அலட்சியம் இருந்தால் அது தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.