பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரலாறு குறித்து கூறிய கருத்துக்கு மாற்று கருத்தை தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்ட போது அமித் ஷா வரலாறு குறித்து கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. வரலாறுகளில் முகலாயர்களுக்கு தேவையின்றி கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாறாக மற்ற இந்திய பேரரசுகளான பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், மவுரியர்கள், குப்தர்கள் போன்றோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு நிதிஷ் குமார், 'நீங்கள் வரலாற்றை மாற்றப் போகிறீர்களா என்ன. ஒருவரால் வரலாற்றை எப்படி மாற்ற முடியும் என எனக்கு புரியவில்லை. வரலாறு என்பது வரலாறு தான். மொழி என்பது தனி விவகாரம், ஒருவரால் அடிப்படை வரலாற்றை எப்படி மாற்ற முடியும்' என பதில் அளித்துள்ளார்.
பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தாலும், நிதிஷ் குமாரே முதலமைச்சராக இந்த கூட்டணி அரசில் நீட்டித்து வருகிறார். சமீப காலமாகவே பல்வேறு விவகாரங்களில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு மாற்றுப் பாதையில் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ் குமார் முடிவெடுத்துள்ளார். இதற்கு பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன.
இதையும் படிங்க:
பேரணியாக சென்று அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி ஆஜர்.. நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
அதேபோல், மத மாற்ற தடை சட்டம், சிஏஏ-என்ஆர்சி போன்ற விவகாரங்களிலும் பாஜகவுக்கு நிதிஷ் குமார் மாற்று நிலைப்பாட்டில் உள்ளார்.மேலும், மத்திய அமைச்சரவையில் இருந்த தனது கட்சி உறுப்பினரான ஆர்சிபி சிங்கிற்கு மீண்டும் மாநிலங்களை உறுப்பினர் பதவி தர நிதிஷ் குமார் மறுத்துவிட்டார். ஆர்சிபி சிங் பாஜகவுடன் நெருக்கம் காட்டியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் பீகாரில் பாஜக கூட்டணி சற்று சலசலப்புடன் காணப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.