பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல குற்றவாளி, சிறைக்குள் ஸ்பெஷல் சாப்பாடு, மொபைல் போன், டிவி என விஐபி போல உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வரும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சிறைத்துறை டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவின் பரப்பன அக்ரகஹாரா பகுதியில் கர்நாடகாவின் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய ஜேசிபி நாராயண சாமி என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். நாராயண சாமி, சிறைத்துறையினருக்கு லஞ்சம் அளித்ததன் பேரில், அவரது ரூமில் சோஃபா, தொலைக்காட்சி பெட்டி வசதிகளை சிறைத்துறையினர் செய்துதந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மொபைல் போன், கொசு விரட்டும் பேட், ஸ்பெஷல் சாப்பாடு போன்ற பல வசதிகளும் அவருக்காக ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கிறது.
லஞ்சம் அளித்ததால் விஐபி போன்ற வசதிகளுடன் சொகுசான வாழ்க்கையை பரப்பன அக்ரஹாரா சிறையில் நாராயண சாமி அனுபவித்து வந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதன் பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் முதல்வர் பசவராஜ் பொம்மையின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
Also read: ரயிலுக்கு தீ வைப்பு: வன்முறையை தூண்டிவிட்டதாக பிரபல யூடியூபர் மீது வழக்கு!!
சிறையில் நடக்கக்கூடிய விஷயங்கள் குறித்து அறிக்கை கேட்டுப் பெற்று, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபியிடம் பேசி, இதில் தொடர்புடைய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். “சிறையில் முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை கவனித்தேன். முன்னதாக சிறைக்கு சென்று சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளை சந்தித்தேன். சிறைகள் சட்டவிரோத செயல்களின் மையமாக மாறக்கூடாது. கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Also read: சூப்பர் ஹூரோ 'மின்னல் முரளி' உடையில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மணமகன்!
கடந்த 2017ம் ஆண்டு வி.கே.சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இதே போன்ற பிரச்னையில் சிக்கியது நினைவுகூறத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.