கியான்வாபி மசூதியில் தொழுகைக்காக கை, கால் கழுவும் ஒசுகானாவிற்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் எழுந்த சர்ச்சைகள் குறித்து சத்தீஸ்கர்
பாஜக, எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால், ‘சிறுபான்மையினரை திருப்தி செய்வதற்காக
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த வழிப்பாட்டுத் தலங்கள் சட்டம், 1991 தான் இந்த விவகாரத்திற்கெல்லாம் காரணம் என்று சாடியுள்ளார்.
பி.வி.நரசிம்மராவ் The Places of Worship (Special Provisions) Act, 1991 என்பதைக் கொண்டு வந்ததுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் பாஜக எம்.எல்.ஏ. அகர்வால். 2001ம் ஆண்டுக்கு முன்பு கியான்வாபியில் சிவபெருமான் வழிபாடு நடந்தது. ஆனால் காங்கிரஸின் இந்த மசோதாவினால் அங்கு நமாஸ் நடைபெற தொடங்கியது என்று மேலும் தெரிவித்தார் அகர்வால்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் கள ஆய்வு திங்கள்கிழமை நிறைவு பெற்றது. கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த ஆய்வில், தொழுகைக்காக கை, கால்கள் கழுவும் ஒசுகானா எனும் நீர்குளத்திலும் ஆய்வு நடைபெற்றது. இதற்காக, ஒசுகானாவில் இருந்த நீர் அனைத்தும் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் குளத்திற்குள் நடைபெற்ற கள ஆய்வில் ஒசுகானாவின் மத்தியப் பகுதியில் சிவலிங்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை, சிங்காரக்கவுரி அம்மன் தரிசன வழக்கின் ஒரு மனுதாரரின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான ஒரு மனுவையும் தரிசன சிங்காரக்கவுரி அம்மன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ரவி குமார் திவாகர் முன்பாக சமர்ப்பித்தார். அந்த மனுவை ஏற்ற நீதிபதி, உடனடியாக மசூதியின் உள்ள இருக்கும் ஒசுகானாவை கையகப்படுத்த வாராணசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் தான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம் என்று சாடுகிறார் சத்திஸ்கர் எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால்.
மேலும் அவர் ஒலிபெருக்கி விவகாரத்தில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசை சாடினார். மற்ற மாநிலங்களில் ஆஜானின் போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. பூபேஷ் பாகேல் அரசு அதே உத்தரவை பிறப்பிக்குமா என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று பேசியுள்ளார் அகர்வால்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.