குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, 2-ம் கட்டமாக, அகமதாபாத், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் பூபேந்திர படேல், ஹர்திக் படேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
2-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், இறுதி நாளில் மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
இதையும் படிங்க: ரயில்வே பயணிகள் மூலம் ரூ.43,324 கோடி வருவாய் - இந்திய ரயில்வே தகவல்
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அகமதாபாத் நகரில் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, யாரோ ஒருவரின் உத்தரவு காரணமாக, காங்கிரஸ் வாக்குகளை பிரிக்க குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுவதாக கூறினார். எனினும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறும் என மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பாரதி, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.