ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்க முடிவெடுத்திருப்பது ஜம்மு மக்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகம் என விமர்சித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நேற்று இரவு முதல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான மெகபூபா முஃப்தி, சஜத் லோன், ஓமர் அப்துல்லா ஆகியோ வீட்டுச்சிறையிலிருந்து தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது மாநில உரிமையின் மீதான அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதனால் மிகவும் அபாயகரமான விளைவுகள் ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசன விதியை மீறி ஜம்மு காஷ்மீரின் ஒப்புதல் இன்றி இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடன் மட்டும் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏமாற்றுத்தனமான வேலை என்றும் துரோகம் என்றும் ஓமர் அப்துல்லா பாஜக-வை விமர்சித்துள்ளார்.
“எங்களிடம் பொய் சொல்லி எங்களை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டு இந்த துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எதிராக எதுவும் திட்டமிடப்படவில்லை எனக் கூறிவிட்டு காஷ்மீரின் ஜனநாயகக் குரலை முடக்கி லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களை மாநிலம் முழுவதும் நிறைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம்” என்றும் ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பார்க்க: இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று! - வீட்டுச்சிறையிலிருந்து மெகபூபா முஃப்தி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.