காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மூன்று முறை அங்கே செல்ல முயற்சி செய்தார். ஆனால், அவர் காஷ்மீர் மாநில அதிகாரிகளால் ஸ்ரீநகர் விமானநிலையத்திலேயே திரும்ப அனுப்பப்பட்டார்.
அதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீருக்குச் சென்றார். நான்கு நாள்கள் காஷ்மீரைச் சுற்றிப் பார்த்த குலாம் நபி, இன்று ஜம்மு பகுதிக்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளது. ஊடகங்களின் முன் தற்போது எதையும் கூற முடியாது. நான், காஷ்மீரில் நான் நாள்கள் இருந்தேன். தற்போது ஜம்மு பகுதியில் இரண்டு நாள்கள் இருக்கவுள்ளேன். ஆறு நாள் பயணத்துக்குப் பிறகு என்ன சொல்லவேண்டுமோ அதனைச் சொல்வேன்.
காஷ்மீர் நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்வது குறித்து டெல்லி சென்ற பிறகு முடிவு எடுப்பேன். காஷ்மீரில் நான் செல்லவேண்டும் என்று நினைத்ததில் 10 சதவீத இடத்துக்குக் கூட அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காஷ்மீரில் பேச்சுச் சுதந்திரத்துக்கான எந்த அடையாளமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kashmir