காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத், புதிய கட்சி அறிவிப்புக்கான பொதுக்கூட்டத்தை ஜம்மு காஷ்மீரின் சைனிக் காலனியில் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, காஷ்மீரி பண்டிட்டுகளின் மறு வாழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். முன்னதாக பொதுக்கூட்ட திடலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குலாம் நபி ஆசாத்துக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதலமைச்சர் தாரா சந்த் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவாக வந்திருந்தனர். கூட்டத்தில் புதிய கட்சி அதன் கொள்கைகள் குறித்து பேசிய அவர், புதிய கட்சியின் பெயர், கொடி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் மற்றும் முன்னணி தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் இது முடிவு செய்யப்படும். புதிய கட்சி முதலில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் தொடங்கப்பட்டாலும் அது தேசிய அளவிலான கட்சியாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ரத்தத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. கம்ப்யூட்டராலும், சமூக வலைத்தளங்களாலும் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. இப்போது கட்சி களத்தில் செயல்படாமல் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு நமது புதிய கட்சி ஆட்சியை கைப்பற்றும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை காத்தல், உள்ளூர்வாசிகளுக்கு நிலம் வழங்குதல், காஷ்மீரி பண்டிட்டுகளின் மறு வாழ்வு ஆகியவற்றை நிறைவேற்ற புதிய கட்சி பாடுபடும் என்றார்.
இதையும் படிங்க: கே.கே. ஷைலஜா-வுக்கு கிடைக்க இருந்த மக்சேசே விருது - முட்டுக்கட்டைப் போட்ட கட்சித் தலைமை
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாத இறுதியில் ராஜினாமா செய்தார்.தனது ராஜினாமா தொடர்பாக கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் மோசமான நிலைக்கு ராகுல் காந்தி தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். "ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையை ஏற்றபின் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். அனுபவமில்லாத, உதவியாளர் நிலையில் இருக்கக்கூடியவர்கள் கட்சியை நடத்த தொடங்கினார்கள். 2 மக்களவை தேர்தல் தோல்வி, மாநிலங்களில் ஆட்சியமைக்க முடியாதது உள்பட காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம்" என்று குலாம் நபி ஆசாத் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Jammu and Kashmir