கம்ப்யூட்டர் வாங்க முடியாத நிலையில் இருந்த ஒருவர், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிவதும், தெரு ஓரத்தில் படுத்திருந்தவர், மும்பையின் வசதியான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அளவுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்பதும் அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல.. இப்படி, வாழ்க்கை தனக்கு கொடுத்த அனைத்து சவால்களையும் தாண்டி, மிக வலிமைமிக்க தன்னம்பிக்கை பெண்ணாக ஷாகினா அத்தர்வாலா உருவெடுத்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முன்னணி டிசைனராக பணிபுரிந்து வரும் ஷாகினா, மும்பையின் சேரி பகுதயில் பிறந்து வளர்ந்த தனக்கு வாழ்க்கை கொடுத்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது தன்னன்பிக்கை வாழ்க்கை கதை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக ஷாகினா தனது ட்விட்டர் பதிவில், நெட்பிளிக்ஸ் தொடரில் தனது பழைய இல்லத்தை பார்த்ததும், தனது வாழ்க்கை கதையை நினைவுகூர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். “Bad Boy Billionaires: India" என்ற அந்த நெட்பிளிக்ஸ் தொடரில், நான் வாழ்ந்த சேரி பகுதி பறவை பார்வையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் காட்டப்பட்டிருக்கும் பல வீடுகளில் எனது வீடும் ஒன்றாகும். அங்கிருந்து, 2015ல் தனியாக எனது வாழ்க்கையை மேம்படுத்த கிளம்பினேன் என்று தெரிவித்துள்ளார்.
Also read: 2022ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் அமெரிக்கர் - குற்றமும்.. பின்னணியும்..
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஷாகினா அளித்த பேட்டியில் கூறியதாவது, மும்பையின் பந்த்ரா ரயில் நிலையம் அருகே உள்ள தர்கா காலி சேரிப் பகுதியில் தான் வாழ்ந்து வந்ததாகவும், அவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த ஒரு நடைபாதை எண்ணெய் வியாபாரி என்று கூறியுள்ளார். பாலின சார்பு, பாலியல் துன்புறுத்தல் என சேரி வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. எனினும், இவையெல்லாம், என் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.
15 வயதில், என்னைச் சுற்றியிருந்த பல பெண்கள் ஆதரவற்றவர்களாக, யாரையேறும் சார்ந்திருப்பவர்களாக, துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களாக, சுயவிருப்பங்களை நிறைவேற்ற முடியாத ஆளாகவோ, வாழ்நாள் முழுவதும் சுதந்திரம் இல்லாத வாழ்க்கையை வாழும் ஆளாகவோ கடந்த செல்வதை கவனித்தேன்.
நானும் இதுபோன்ற வாழ்க்கை முறையில் சிக்கிவிடக்கூடாது என்று என்னினேன்.. எனக்காக காத்திருக்கும் விதியை மாற்ற விரும்பினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, முதன் முறையாக ஷாகினா தனது பள்ளியில் கம்ப்யூட்டரை பார்த்துள்ளார். அவரது சிந்தனை முழுவதும் அதை நோக்கி நகர்ந்தது. கம்ப்யூட்டர் தனது வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் என்று நினைத்துள்ளார். கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கும் எவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பியுள்ளார்.
எனினும், அவர் பெற்ற மதிப்பெண்கள் காரணமாக கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு செல்வதற்கு பதிலாக வேறு வேலைகளை செய்ய அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். பல நிராகரிப்புகளை அவர் கண்ட பின்பும், தொழில்நுட்பம் ரீதியாக செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது தந்தையிடம் கடன் வாங்கியாவது தன்னை கணினி வகுப்பில் சேர்த்து விடும்படி கோரியுள்ளார். தொடர்ந்து, சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்கி விட வேண்டும் என மதிய உணவு உண்ணாமல், அந்த பணத்தை கூட சேமித்து வைத்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் கம்ப்யூட்டரை பெற்றுள்ளார்.
பின்னர் அதில் புரோகிராமிங் துறையை தேர்வு செய்யாமல், டிசைனிங் துறையை தேர்வு செய்துள்ளார். பின்னர் பல வருடமாக தான் எடுத்த முடிவில் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் கடின உழைப்பு மேற்கொண்ட ஷாகினாவுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
கடந்த வருடம் மும்பையின் முக்கியப்பகுதியில் உள்ள வசதியான அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர் குடிபெயர்ந்துள்ளார். இது வாழ்க்கையில் தான் எடுத்து வைத்து மிகப்பெரிய படி என்றும், தனது கடின உழைப்புக்கு கிடைத்து சான்று என்றும் ஷாகினா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் இளம்பெண்களுக்கு, ஷாகினா சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அதில், கல்விக்காவும், திறன்களை மேம்படுத்துவதற்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அதுவே உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றும் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த சமயத்தில் பல ஆண்டுகளாக தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை வழங்கி வட வேண்டும் என்பதற்காக, தன்னையே தியாகம் செய்த அவரது தந்தைக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். என் தந்தையின் பொறுமையும், தியாகமும் இன்று எங்களை சிறந்த வாழ்க்கை தரத்திற்கு உயர்த்த உதவியுள்ளது. நாங்கள் சேமிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினோம். எங்களது வருமானத்திற்கு குறைவாகவே வாழ்ந்து வந்தோம். இதற்கு தேவையான பல தியாகங்களையும் செய்து வந்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also read: விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள்!!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.