சஸ்பெண்ட் செய்யப்பட்ட
பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹ்ரான்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்நிலையில், கலவரக்கார்களை கடுமையாக ஒடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அம்மாநில உயர் அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சக்திகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சக்திகளுக்கு நாகரீக சமூகத்தில் இடம் இல்லை. அப்பாவிகள் யாரும் பாதிக்காத வகையிலும், அதேவேளை, குற்றம் செய்த ஒரு நபரும் தப்பாத வகையிலும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்துள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலவரம் தொடர்பாக இதுவரை 237 பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்படும் நபர்களின் சட்டவிரோத கட்டுமானங்களை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சஹ்ரான்பூர் பகுதியில் முசாம்மில், அப்துல் வாகிர் ஆகிய இருவரின் சட்டவிரோத கட்டுமானங்களையும், கான்பூரில் சபார் ஹயத் ஹாஸ்மி என்பவரின் சொத்துக்களையும் காவல்துறை இடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் மிருத்தியஞ்சய் குமார் அரசின் இந்த புல்டோசர் நடவடிக்கை புகைப்படத்தை வைத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1,000 கோடி நிதி - நிதின் கட்கரியின் சவாலை ஏற்று 15 கிலோ குறைத்த எம்.பி
அதில் 'ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு அடுத்த நாளில் சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளார். இந்த கலவரங்கள் வெள்ளிக் கிழமையான நேற்று நடைபெற்ற நிலையில், இதில் ஈடுபட்டோர் மீது இன்று புல்டோசர் நடவடிக்கை குறிக்கும் விதத்தில் மிருத்தியஞ்சய் குமார் இதை கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.