நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடந்த மாதம் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் குணமாகும்வரை கால அவகாசம் வழங்குமாறு சோனியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை அமலாக்கத்துறை ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வருகிற 21ஆம் தேதி சோனியா காந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளானார். கடந்த மாதம் ராகுல் காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ராகுலும் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். கடந்த ஜூன் 13, 14, 15, 20, 21 ஆகிய ஐந்து நாள்கள் ராகுல் காந்தியிடம் சுமார் 50 மணி நேரம் கேள்வி எழுப்பி விசாரணை நடத்தினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த விசாரணை நடத்தப்படுகிறது என காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டத்தை கடந்த மாதம் நடத்தியது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தலைநகர் டெல்லியில் பெரும் போராட்டம் நடத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி
அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:
கோவாவில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 5 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. எதிர்க்கட்சி தலைவரின் பதவி பறிப்பு
இதையடுத்து, 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.