சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. வரும் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்க சபரிமலைக்கான சிறப்பு அதிகாரியான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டு விஷ்ணுராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அதிகாரி அஜி, துணை அதிகாரி தபோஸ் பஸ்மதரி, செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், துணை கமாண்டர் விஜயன் மற்றும் அனைத்து துறை முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதி இல்லை என்றும் தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள், சன்னிதானத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்கு ஏற்றி வரும் டிராக்டர்கள் கண்காணிக்கப்படும் என்றும் சமையல் செய்யும் பாத்திரங்களை சன்னிதானத்தில் விற்பனை செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பம்பை முதல் சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் வருவாய், தேவஸ்தானம், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் நின்று 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஆங்காங்கே ஆம்புலன்ஸ் நிறுத்தவும் ஏற்பாடு செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.