டெல்லியில் கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையினால் பல மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் சொல்லனாத்துயரில் சிக்கியுள்ளன.
நாட்டில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இன்று அது 3.50 லட்சத்தை நெருங்கியிருக்கிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2,767 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரே நாளில் 24,103 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 357 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து டெல்லியில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,04,782 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை கடந்த 6வது மாநிலமாக டெல்லி மாறியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் டெல்லியில் சுகாதார கட்டமைப்பு தகர்ந்து போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு படுக்கை வசதிகள் கிடைக்காமலும், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிட் மருந்து சப்ளை கிடைக்காமலும் பலரும் பாதிப்படைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் ஏற்கனவே இருக்கும் முழு ஊரட்ங்கை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் முழு ஊரடங்கினை கடந்த வாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். கடந்த 21ம் தேதி முதல் நாளை (ஏப்ரல் 26) வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மேலும் 6 நாட்களுக்கு அதாவது மே 3ம் தேதி (திங்கள்) காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லியில் அனுமதி உள்ளது. பிற தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஈ-பாஸ் பெற்றே பயணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிப்பு குறையாததால் இந்த ஊரடங்கு நடவடிக்கை அவசியம் தேவைப்படுகிறது. ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்திய போதிலும் கூட டெல்லியில் பாசிட்டிவிட்டி ரேட் குறையவில்லை. தற்போது பாசிட்டிவிட்டி ரேட் 36-37% ஆக உள்ளது. இது இதுவரையில் இல்லாத ஒரு உச்சம் ஆகும். ஆனால் இன்று அது 29% ஆக உள்ளது. என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, Corona, COVID-19 Second Wave, Delhi, Lockdown