12-14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, அதற்கான தேதியையும் தற்போது வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அந்த வகையில் ஒவ்வொருவரும் குறைந்தது 2 டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படுவோர் கூடுதலாக பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூடுதலாக 2 டோஸ்கள் வரை செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் 18 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. நிலைமை சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், அடுத்த கட்டமாக 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தற்போது மார்ச் 16-ம்தேதி முதல் 12-14 வயதுடையவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க -
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது... தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை
இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '12- 14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வயதினை சேர்ந்தவர்கள் 2008, 2009, 2010 ஆண்டுகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு மார்ச் 16, 2022 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 182.79 கோடிக்கும் மேற்பட்ட (1,82,79,40,230) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.38 கோடிக்கும் மேற்பட்ட (17,38,21,446) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.