ஐந்து மாநில தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அதே சமயம், கடந்த மாதம் கொரோனா தடுப்பூசியையும் அவர் செலுத்திக்கொண்டார். இருப்பினும், சுஷில் சந்திராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 12ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா 13-ம் தேதி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொற்று பாதிப்பால் வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் காணொலி வாயிலாக ஆஜராகி இருந்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, இதனை மிக தீவிர பிரச்சனையாக கருதி முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அறிவுறுத்தினார்.