கட்டுக்கட்டாக பணத்துடன் மேற்கு வங்க காவல்துறையிடம் சிக்கிய ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவரை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜார்கண்ட் மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே இதை தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் மூவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யக் கூறி கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்தில் மேலும் யாரவது தொடர்பில் இருக்கிறார்களா என்பதை விரைவில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவினாஷ் பாண்டே கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு, மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்டுக்கட்டான பணத்துடன் பிடிபட்டனர். ஒரு கருப்பு நிறக் காரில் அதிக அளவிளான பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என ஹவுரா காவல்துறைக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் வந்த மூன்று பேர் கட்டுக்கட்டான பணத்துடன் பிடிபட்டனர்.
இவர்கள் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்சால் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. இவர்களின் காரில் இருந்த பணத்தை எண்ணுவதற்கு அருகே இருந்த வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இவர்களிடம் இருந்து சுமார் ரூ.48 லட்சம் ரொக்கம் பிடிபட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாநில அரசுகள் மின் நிறுவனங்களுக்கு நிலுவை தொகைகளை விரைவில் வழங்க வேண்டும் - பிரதமர் மோடி
பணம் குறித்து எம்எல்ஏக்களிடம் விசாரிக்கையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி உலக பழங்குடி இன தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தங்கள் தொகுதி பழங்குடி மக்களுக்கு பரிசு வாங்க இந்த பணத்துடன் மேற்கு வங்கம் வந்ததாக அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். ஆனால், பணத்திற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்பதால் காவல்துறை அவர்களின் விளக்கத்தை ஏற்கவில்லை. எனவே, அவர்களை காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜார்கண்ட்டில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க பாஜக செய்யும் சதி திட்டம் என காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளது. ஆப்ரேஷன் கமலாவை ஜார்கண்ட்டிலும் பாஜகவினர் தொடங்கியுள்ளனர் என காங்கிரஸ் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Jharkhand, Sonia Gandhi