அரசு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் குழந்தைகள் பிறந்துள்ளது. எந்த குழந்தை யாருக்கு பிறந்தது என ஊழியர்கள் குறிப்பெடுக்கத் தவறியதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவற்றில் ஆண் குழந்தை என்னுடையது என இரண்டு பேரும் அடம்பிடித்ததால் நிலைமை இன்னும் மோசமானது.
தெலுங்கானா மாநிலம் மாஞ்சிரியாலா அரசு மருத்துவமனையில் பவானி மற்றும் மம்தா ஆகிய 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27-ந்தேதி இரவு இரண்டு பேருக்கும் எட்டு நிமிட இடைவெளியில் குழந்தை பிறந்தது. அவற்றில் ஒன்று ஆண் குழந்தை; மற்றொன்று பெண் குழந்தை.
குழந்தைகள் பிறந்தவுடன் முதல் உதவி சிகிச்சைக்காக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இரண்டு குழந்தைகளையும் எடுத்துச் சென்றனர். அப்போது யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை ஊழியர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர்.இதனால் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் எந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை பெற்ற பெண்களிடமே யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கேட்டு ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்த ஊழியர்கள் இரண்டு பெண்களிடமும் கேட்டனர். அப்போது இரண்டு பேரும் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது எனக்குத்தான் என வாதிட்டனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
மருத்துவமனை அதிகாரிகள் வந்து விசாரித்தபோது இரண்டு பெண்களும் எங்களுக்கு பெண் குழந்தை பிறக்கவே இல்லை என்று சத்தியம் அடித்து கூறிவிட்டனர். இதனால் குழப்பத்தின் உச்சிக்கு சென்ற மருத்துவமனை நிர்வாகம் ஆண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை என்னுடையதுதான் என்று கூறும் இரண்டு பெண்கள் ஆகியோரிடம் மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பரிசோதனை முடிவுகள் வரும் வரை குழந்தைகளை ஒப்படைக்க இயலாது என்பதால் இரண்டு குழந்தைகளும் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையிலேயே உள்ளனர். இந்த விவாதத்திற்கு காரணமாக அமைந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் செய்த குளறுபடி காரணமாக இரண்டு குழந்தைகளும் இப்போது தாய்ப்பால் குடிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு பாட்டில் பால் குடித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupathi