பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில்
ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கொரோனா காலத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தனிக்கவனம் செலுத்தும் புதுச்சேரி அரசு மருத்துவமனை.. மருத்துவர்களின் அறிவுறுத்தல் என்ன?
இதனையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 18 மாநில தலைமைச் செயலர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தது.
மேலும் படிக்க.. தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை - ஒடிசா, ராஜஸ்தான் அரசுகள் அறிவிப்பு
ஏற்கனவே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிஷாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகள் வெடித்தால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.