ஹோட்டல், கடைகள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு செல்லும்போது உங்களுக்கும் இப்படி ஒறு அனுபவம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். அதாவது, நீங்கள் வாங்கிய பொருள் அல்லது நீங்கள் பெறும் சேவைக்கான கட்டணம் ரூ.50 என்று வைத்துக் கொண்டால், அதுனுடன் ஜிஎஸ்டி வரியை சதவீத அளவில் சேர்க்கும்போது அது முழுமை பெறாத ஒரு தொகையாக வந்து சேரும். அதாவது ரூ.57.40 அல்லது ரூ.58.70 என்பதைப் போல பில் அமவுண்ட் வரும். தினசரி நீங்கள் கடந்து வரும் அனுபவம் தான் என்றாலும், இந்தத் தொகை எப்படி வசூல் செய்யப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்திருக்க வாய்ப்பில்லை. நம்மை பொருத்தவரை, அந்தத் தொகையை கூட்டியோ, கழித்தோ ரவுண்ட் ஆஃப் செய்து கடைக்காரர் பெற்றுக் கொள்வார் என்பது மட்டும் தெரியும்.
ஆனால், என்றாவது ஒருநாள் எனக்கு அந்த மீதமுள்ள பைசாவை திருப்பிக் கொடுங்கள் என்று நாம் சண்டையிட்டிருப்போமா? இல்லை தானே, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்றால் கேட்டு வாங்குவது நமது உரிமை. ஆனால், இந்தியாவில் பைசா மதிப்பு நாணயங்கள் செல்லாத ஒன்றாகி விட்டபோது, அதை எப்படி கேட்டு வாங்க முடியும். சாத்தியம் இல்லை தானே?
இருப்பினும், இந்த பைசா கணக்கை பார்க்கப் போய், சிக்கலில் மாட்டியிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர். பெங்களூரு சென்ட்ரல் தெருவில் உள்ள ஹோட்டல் எம்பையர் என்ற உணவகத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் மூர்த்தி என்ற முதியவர் சென்றார். அங்கு அவர் வாங்கிய உணவுப் பார்சலுக்கு வரியுடன் சேர்த்து ரூ.264.60 பில் தொகை வந்தது. இதையடுத்து ஹோட்டல் பணியாளர்கள் அவரிடம் ரூ.265 வசூல் செய்தனர்.
10 வயது சிறுவனின் பிரான்க்... அலறிய விமான பயணிகள், அதிகாரிகள்.. அப்புடி என்ன நடந்தது?
ஆனால், தன்னிடம் 40 பைசா கூடுதலாக வசூலிக்க மூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஹோட்டல் ஊழியர்கள் எவ்வளவோ சமரசம் செய்ய முயன்றும் அவர் சமாதானம் அடையவில்லை. இறுதியாக வழக்கு தொடுத்தார் மூர்த்தி.
நுகர்வோர் நீதிமன்றம் கண்டிப்பு
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, வழக்கில் தானே நேரடியாக ஆஜராகி மூர்த்தி வாதாடினார். ரெஸ்டாரண்ட் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். ஒரு பொருளுக்கு வரி விதிக்கும்போது, தொகையை ரவுண்ட் ஆஃப் செய்து வசூலிக்க வருமான வரிச் சட்டம் 2017 இல் உள்ள 170 ஆவது பிரிவு அனுமதிக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து, மத்திய அரசின் சுற்றறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அதாவது பில் தொகை வரும்போது 50 பைசாவுக்கும் குறைவாக இருந்தால் அதை நிறுவனதாரர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், 50 பைசாவுக்கு மேல் வந்தால் அதற்கு அடுத்த முழுமையான ரூபாயில் அதை ரவுண்ட் ஆஃப் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுதாரர் சுய விளம்பரம் கருதி இந்த வழக்கை தொடுத்திருப்பதாக நீதிமன்றம் கண்டித்தது. ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.2,000 மற்றும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக ரூ.2,000 என மொத்தம் ரூ.4,000 அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை 30 தினங்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.