உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமரின் உதவித்திட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு 4 பெண்கள் கணவரை கைவிட்டு காதலர்களுடன் ஓட்டம் பிடித்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா(PMAY) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் வீடு கட்ட தரப்படும். முதலில் ரூ.50 ஆயிரம் தரப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
அதை அதிகாரிகள் சரிபார்த்து அடுத்த தவணையாக ரூ.1 லட்சம் தருவார்கள். அதன் பின்னர் கடைசி தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் 4 பேருக்கு முதல் தவணை தொகை வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கவில்லை. இதனால், திட்டத்தின் அலுவலர் சுரப் திரிபாதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசிற்கு சம்பந்தப்பட்ட நான்கு ஆண்கள் அளித்த பதில் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எனக்கு 65..உனக்கு 23.. 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த அதிசய திருமணம்..!
முதல் தவணை பணம் ரூ.50,000 இவர்களின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது. பணம் வந்து சேர்ந்ததும் இந்த நான்கு பேரின் மனைவிகளும் அவர்களின் கள்ளக்காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், இதனால் தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், அடுத்த தவணையை தப்பித் தவறிகூட அதே வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அலுவலரிடம் கோரியுள்ளனர். இவர்களின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த அலுவலர் சுராப் திரிபாதி பறிபோன பணத்தை எப்படி மீட்பது என்ற தீவிரமாக யோசித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh