பீகார் மாநிலத்தில் மருத்துவம் பார்க்கச் சென்ற கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த பித்ஹாவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியம் குமார் ஜா. கால்நடை மருத்துவரான இவர் கடந்த செவ்வாய்கிழமை மத்தியம் அருகே உள்ள பகுதியில் மாட்டுக்கு மருத்துவம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது தந்தை சுபோத் குமார் ஜா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது தந்தை அளித்துள்ள புகாரில், 'எனது மகனை காணவில்லை என நாள் முழுவதும் தேடிப் பார்த்து தவித்து வந்தேன். அடுத்த நாள் காலை எனது செல்போனுக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது. அதில் எனது மகன் மணக்கோலத்தில் உட்கார வைக்கப்பட்டு ஒரு பெண்ணுடன் திருமணச் சடங்கு நடத்தப்பட்டது. இதை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை உரிய விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஆண் ஒருவரை கடத்தி பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் பல மாவட்டங்களில் இயல்பாக நடைபெறுகின்றன.இதை அங்கு Pakadwa திருமணம் எனக் கூறுகின்றனர். நல்ல சம்பாத்தியம் கொண்ட இளைஞரை்கள் அல்லது சொத்து கொண்ட இளைஞர்கள் ஆகியோரை குறிவைத்தே இந்த கடத்தல் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
அடக்குமுறையுடன் கைது செய்து ஆடையை கிழித்த போலீசார் - எம்பி ஜோதிமணி புகார்
சில ஆண்டுகளுக்கு முன்னர் வினோத் குமார் என்ற 29 வயது ஒருவருக்கு இதே அவலம் நடைபெற்றது. பொறியாளாரன இவர் போகாரோ உருக்கு ஆலையில் ஜூனியர் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். இவரை ஒரு கும்பல் கடத்தி அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் தலைப்பு செய்தியாக மாறி பரபரப்பை கிளப்பியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.