திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த அமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு போன்ற வெவ்வேறு நகரங்களில் நடைபெற்ற வீடியோக்களை திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி சிலர் வதந்தி பரப்பி வந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை, தமிழ்நாடு அமைதியாக உள்ளது. வதந்திகளை பரப்புவது மிகப்பெரிய குற்றம். வதந்தி பரப்புவது தொடர்பாக இதுவரை 2 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மேலும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தனர்.
அந்த வகையில், புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய அமன் என்பவர் பிகாரில் கைது செய்யப்பட்டார். பிகாரின் ஜாமி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் மீது புரளி கிளப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாட்னாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர சிங் கங்குவார். இவ்வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், ஜாமி மாவட்டத்தைச் சேர்ந்த அமன் என்பவர் கைது செய்யப்பட்டதாக கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடர்பாக வதந்தி பரப்பிய மேலும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஒரு டி.எஸ்.பி. உட்பட 4 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர் பற்றி திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாகவும் பிகார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு குறித்து வதந்தி பரப்பியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிகார் கூடுதல் டிஜிபி உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrest, Bihar, Migrant Workers, Police