முகப்பு /செய்தி /இந்தியா / ஆந்திரா டூ ஒடிசா.. இறந்த மனைவியை தோளில் சுமந்து 115கிமீ நடக்கத் தொடங்கிய கணவன்.. காவல்துறை உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஆந்திரா டூ ஒடிசா.. இறந்த மனைவியை தோளில் சுமந்து 115கிமீ நடக்கத் தொடங்கிய கணவன்.. காவல்துறை உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஆந்திரா

ஆந்திரா

ஆட்டோவில் செல்லும்போது மனைவி உயிரிழந்ததால் ஆட்டோ ஓட்டுனர் இவர்களை பாதியிலேயே இறக்கி விட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

கையில் பணம் இல்லாமல் மனைவியை ஒடிசா வரை தோளில் சுமந்து செல்ல நினைத்த கணவனுக்கு ஆந்திர மாநிலம் போலிசார் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈடே குரு (30) என்ற பெண். இவரது கணவர் சாமுலு. இவர்கள் இருவரும் ஆந்திராவில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் ஈடே குருவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விசாகா மாவட்டம் தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்தும் இவரது உடல்நிலை சரியாகவில்லை. கணவர் கையில் இருந்த பணமும் சாமுலுவிடம் தீர்ந்துகொண்டே வந்தது.

தொடர்ந்து சிகிச்சையளிக்க முடியாததால், சாமுலு, ஈடே குருவை டிஸ்சார்ஜ் செய்து தனது வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பினார். இதனால் கடந்த புதன்கிழமை ஈடே குருவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வேறு வாகனம் மூலமாக ஒடிசா அழைத்து செல்ல திட்டமிட்டார். ஆந்திராவில் அவர் தங்கியிருந்த இடத்தில் அவர்களது சொந்த கிராமம் கிட்டத்தட்ட 145கிமீ. இதற்காக ஒரு ஆட்டோவிடம் பேசிவிட்டு மனைவியை அழைத்துகொண்டு கணவர் கிளம்பினார்.

இந்நிலையில் ஆட்டோ விஜயநகரம் மாவட்டம் கந்தியாடா மண்டலம் ராமாவரம் வந்தபோது எதிர்பாராத விதமாக மனைவி ஈடே குரு உயிரிழந்தார். ஈடே குரு உயிரிழந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் ‘மேலும் அழைத்துசெல்ல முடியாது’ எனக்கூறி இவர்களை கீழே இறக்கிவிட்டார். பாதி வழியில் ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டதால், கையில் பணமும் இல்லாமல், மொழியும் புரியாமல் என்னசெய்வதென்று தெரியாமல் சாமுலு திகைத்துள்ளார். ஊருக்கு போக இன்னும் 115கிமீக்கு மேல் இருந்த நிலையில் மனைவியை தன் தோளில் தூக்கிக்கொண்டு எந்த பக்கம் செல்கிறோம் என தெரியாமலேயே நடக்கத்தொடங்கியுள்ளார் சாமுலு.

4கி.மீ நடந்து சென்ற நிலையில் அவரை கவனித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்வம் அறிந்து வந்த காவல்துறையினர் அனைத்து தகவலையும் கேட்டு, முதலில் சாமுலுவிற்கு உணவை கொடுத்தனர். பின்னர் ஒரு தனியார் ஆம்புலன்ஸை அழைத்து சாமுலுவையும் அவரது மனைவியின் உடலையும் அவர்களது வீட்டில் விடும்படி அனுப்பி வைத்தனர். மேலும் ஆந்திரா - ஒடிசா எல்லைக்கும், ஒடிசா காவல்துறைக்கும் தகவலளிக்கப்பட்டது. இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவருக்கு காவல்துறை உதவிய சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

First published:

Tags: Ambulance, Andhra Pradesh, Odisha