பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தாய் மற்றும் 4 வயது பெண் குழந்தை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெகூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செளடேஸ்வரிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சன்னவீராசாமி - சந்திரகலா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள். மூத்த குழந்தையை ஹாஸ்டலில் தங்கவைத்துள்ளனர். 4 வயதில் பெண் குழந்தை மட்டும் இவர்களுடன் இருந்துள்ளது. சன்னவீராசாமி அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். சந்திரகலா வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஆயுர்வேத பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளார். சந்திரகலாவின் சகோதரி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் சந்திரகலாவும் அவரது 4 வயது குழந்தையும் சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பெகூர் காவல்துறையில் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது வீட்டில் இருந்து மர்ம நபர் மதியம் வெளியேறியதாக கூறப்படுகிறது.காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “சம்பவ இடத்துக்கு விரைந்த போது சந்திரகலா வீட்டில் இருந்த ஹாலில் சடலமாக இருந்தார். 4 வயது குழந்தையின் சடலம் அறையில் இருந்தது. இருவரின் உடலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கத்திக்குத்துகள் இருந்தது. கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம்.
சந்திரகலாவின் கணவர் வேலைக்கு சென்ற பின் மர்மநபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நபர் மதியம் அங்கிருந்து வெளியேறியுள்ளார். வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களை கொண்டு மர்மநபர் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம்” என்றனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.