நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ அரவிந்தரை தேசத்தின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதுச்சேரி பல்கலைக்கழக கருத்தரங்கு அவையில் நடைபெற்ற ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் அமித் ஷா பங்கேற்றார். விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் என்ற புத்தகத்தினை அமித்ஷா வெளியிட்டார். புத்தக வெளியீட்டிற்கு பின்னர் தொடர்ந்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரவிந்தரின் ஆன்மீக சேவை, சுதந்திர போராட்ட பணிகள், குஜராத்தில் அரவிந்தர் ஆற்றிய பணிகள் குறித்து பாராட்டிப் பேசினார்.
மேலும் தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என தெரிவித்த அமித்ஷா நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ அரவிந்தரை தேசத்தின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். குஜராத்தில் ஸ்ரீ அரவிந்தரோடு நிறைய குஜராத்திகள் பணிபுரிந்ததை அமித்ஷா பெருமையாக நினைவு கூர்ந்தார்.
ஸ்ரீ அரவிந்தருக்கு 75 வயதாக இருந்தபோது, தேசம் சுதந்திரம் பெற்றது. அவரது 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் போது, தேசம் அதன் 75வது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது என்றும் அமித்ஷா தெரிவித்தார். முன்னதாக விழாவிற்கு வந்த உள்துறை அமைச்சருக்கு பாரம்பரிய மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்றவை கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.