மகாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள், தினந்தோறும் குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து கிணற்று நீரை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ளது காதியல் கிராமம். சுமார் ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள இரண்டு கிணறுகளும் முற்றிலும் தண்ணீர் இன்றி வற்றியுள்ளன. குடிநீர் ஆதாரங்கள் வேறு ஏதும் இல்லாததால், அந்த கிராமத்திற்கு டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, நாளொன்றிற்கு இரண்டு முறை வரும் இரண்டு டேங்கர் லாரிகள், தண்ணீரை நேரடியாக மக்களுக்கு விநியோகிக்காமல் முற்றிலும் வற்றியுள்ள கிணற்றில் நீரை நிரப்புகின்றன. இதனால், கைகளில் கிடைக்கக் கூடிய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பக்கெட்டுகள், சிறிய கேன்கள் மற்றும் குவளைகள் என அனைத்தையும், கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கி தண்ணீர் எடுக்க மக்கள் போட்டி போடுகின்றனர்.
முண்டியடித்துக் கொண்டு மக்கள் தண்ணீரை சேகரிக்கும் இந்தக் காட்சிகளே, அந்தக் கிராமத்தில் எந்த அளவுக்கு மிகவும் மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கும் என்பதை விவரிக்கிறது.
அதேநேரம், வற்றிய கிணற்றில் பாய்ச்சப்படும் நீர், சகதியுடன் கலந்து பயன்படுத்த முடியாது நிலைக்கு மாறுகிறது. ஆனால், வேறு வழியின்றி மக்கள் அந்த நீரையே எடுத்து வடிகட்டி காய்ச்சி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் சரியான சாலை மற்றும் மருத்துவ வசதி ஏதும் அங்கு இல்லை என்றும், குடிநீருக்காக தினந்தோறும் தங்கள் உயிரை பணயம் வைப்பதாகவும், காதியல் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கிணற்றில் நிரப்பப்படும் நீர் சிறிது நேரத்திலேயே காலியாகிவிடுவதால், பலரும் ஏமாற்றத்துடன் வெறும் குடங்களுடனே திரும்புகின்றனர். அதன் பிறகு குடிநீர் வேண்டும் என்றால் கொளுத்தும் வெயிலை பாராமல், மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், முதியவர்கள் பலருக்கு அன்றைய நாளுக்கான குடிநீர் கிடைப்பதே கேள்விக்குறி தான்.
எனவே, உயிர் வாழ அத்தியாவசியமான தூய்மையான குடிநீர் தங்களுக்கு கிடைக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.