இந்தியாவை பொருத்தவரை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் விதிகளிலும் ஏராளமான விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் துன்புறாத வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை முடிவு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் புதிய வாகனங்கள் வாங்கி அதை பதிவு செய்யும்போது, அவர்களுக்கு சில சலுகைகள் வழங்க புதிய சட்ட திருத்தம் வழி செய்கிறது. தற்போதுள்ள சட்டப்படி, புதிய வாகனங்களை வாங்கி முதலில் அதை போக்குவரத்து துறையில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ மாற்றங்கள் செய்து பிறகு மீண்டும் அதை போக்குவரத்து துறையிடம் பதிவு செய்ய வேண்டும்.
அல்லது வாகனத்தை வாங்கி அதை பதிவு செய்வதற்கு முன்பே தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து விட்டு வாகத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் நடைமுறை சிக்கல்களை மாற்றுத்திறனாளிகள் சந்திப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கான சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாகனப்பதிவு சட்டம் பிரிவு 53ஏ, 53பி என புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளர்கள் புதிய வாகனத்தை வாங்கிய பிறகு தற்காலிக பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்கள் வாகனத்தில் தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றங்கள் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிறகு 45 நாட்களுக்குள் விண்ணப்பித்து நிரந்தர பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த புதிய சட்டத்திருத்தம் மாற்றுத்திறனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே இந்த புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அன்றிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகபை் பெற்ற பிறகு இந்த புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது. புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் மாற்றுத்திறனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India