முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனா 2வது அலை: மே 15 வரை தாஜ்மகால் உட்பட அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மூட உத்தரவு!

கொரோனா 2வது அலை: மே 15 வரை தாஜ்மகால் உட்பட அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மூட உத்தரவு!

தாஜ்மகால்

தாஜ்மகால்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டில் கொரோனா 2வது அலை மிக தீவிரமடைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் புராதான சின்னங்கள், அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை உடனடியாக மூட வேண்டும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மே 15ம் தேதி வரை மேற்கண்ட அனைத்து நினைவுச் சின்னங்களும் மூட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவின் நகலை கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் “தற்போதுள்ள நாட்டின் கொரோனா சூழல் காரணமாக மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், புராதன இடங்கள் அனைத்தும் மே 15ம் தேதி வரை மறு உத்தரவு வரும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாஜ்மகால், செங்கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இது சுற்றுலா பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தாஜ்மகால் 188 நாட்கள் மூடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போதும் அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டிருந்தது, அதன் பின்பு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மே 15ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இந்த கால அளவை கொரோனா பரவலை கணக்கிட்டு மத்திய அரசு நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் 1,40,74,564 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 14,71,877 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இதுவரையில், 1,73,123 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் நாடு முழுவதும் 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,00,739 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 93,528 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர்.

First published:

Tags: Archaeology, Corona, Taj Mahal