ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ளது கந்த்வாதியா அரசு மருத்துவமனை. அங்குள்ள கிடங்கில் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இரவில் கிடங்கில் இருந்து 320 டோஸ் தடுப்பூசி மருந்து மாயமாகி இருந்தது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிகள் 32 சிறிய புட்டிகள் மாயமாகியிருந்தது கண்டறியப்பட்டது. ஒரு சிறிய புட்டியில் 10 டோஸ் என மொத்தம் 320 டோஸ் தடுப்பூசி மாயமாகி உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசி மாயமாகி இருப்பதை கண்டறிந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்தன், இது தொடர்பாக ஜெய்ப்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான நரோட்டம் சர்மாவுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கந்த்வாதியா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்தன் அளித்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெயர் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திலிப் சிங் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையின் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாகவும், மருத்துவமனையில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு ஆச்சரியமளிப்பதாகவும் ஜெய்ப்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி நரோட்டம் சர்மா தெரிவித்தார்.
இந்த திருட்டு திங்கட்கிழமை நடைபெற்றிருக்கலாம் ஆனால் நேற்று தான் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், இது மாநில அரசின் கவனக் குறைவால் நடைபெற்றுள்ள செயல் என்றும் கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இருந்து திருடுபோயிருப்பது மாநிலத்தின் சுகாதார செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை காட்டுவதாக தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6200 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 1956 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில்
கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 16) முதல் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.