பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்து வந்த இந்தூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியா மீது நேரடியாக தாக்குதல் நடத்துவதைக் காட்டிலும் மறைமுகமாக தாக்குதல் நடத்துவதிலேயே குறியாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் நடந்தேறியுள்ள பல்வேறு சம்பவங்கள் மூலம் இவை வெளிப்பட்டு வருகின்றன. சதி வேலைகளை இந்தியாவில் அரங்கேற்றுவதற்காக பல யுக்திகளையும் பின்பற்றி வருகின்றனர். அதில் முக்கியமானது ஐஎஸ்ஐ எனப்படும் உளவு அமைப்பு. இந்தியா குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி பாகிஸ்தானுக்கு தருவதில் அது முக்கிய பங்கு கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல்களை வழங்கியதாக பல்வேறு நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் தற்போது ஆசிரியைகளாக பணியாற்றி வரும் சகோதரிகளான இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகர் அல்லது Mhow கண்டோன்மெண்ட் என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி ஆசிரியைகள் ஐஎஸ்ஐ (Inter Service Intelligence - ISI) அமைப்புக்கு உளவு பார்த்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.
சமூக வலைத்தளங்களில் போலி அடையாளங்களை பயன்படுத்தி தொடங்கப்பட்ட கணக்குகளின் மூலம் கடந்த ஓராண்டாகவே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் அப்பெண்கள் தொடர்பில் இருந்து வந்தது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறையினரின் கண்காணிப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இதனையடுத்து 28 மற்றும் 32 வயதுடைய அந்த இரண்டு சகோதரிகளையும் இந்தூர் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், பிற மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்தூர் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து அச்சகோதரிகளிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை இந்தூர் காவல்துறை ஐஜி ஹரி நாராயணன் சாரி மிஸ்ராவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஐஜி ஹரி நாராயணன் சாரி மிஸ்ரா கூறுகையில், “Mhow கண்டோன்மெண்ட்டின் கவ்லி பலசியா எனும் பகுதியில் இருந்து இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முக்கியமான தகவல்களை வேறு சில நாடுகளுக்கு அனுப்பியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இரு பெண்களும் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ மற்றும் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மோஹ்சின் கான் மற்றும் திலாவர் ஆகியவர்களுடன் இப்பெண்கள் ஓராண்டாகவே தொடர்பில் இருந்து வந்துள்ளனர்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India and Pakistan, Indore, ISI