உத்தர பிரதேசத்தில் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பானுட்டி பகுதியில் எஸ்பிஐ வங்கியின் கிளை அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற ஊழியர்கள், வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறை திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. வங்கிக்கு அருகில் இருந்து 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய திருடர்கள், கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் அதன் வழியாக சென்று வங்கியின் சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். தொடர்ந்து StrongRoom எனப்படும் தங்க நகைகள் வைத்திருந்த பாதுகாப்பு பெட்டகத்தை கேஸ் கட்டர்கள் மூலமாக வெட்டி திறந்துள்ளனர். பின்னர், சாவகாசமாக தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் 1.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதன் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் எனவும் வங்கி அதிகாரிகள் கூறினர். ஆனால், அருகில் இருந்த பெட்டகத்தை அவர்கள் திறக்காததால் 32 லட்சம் ரூபாய் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சிசிடிவி கேமராக்கள் வேறு வழியில் திருப்பப்பட்டதும், அலாரம் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க; மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயற்சி... திருடர்களை நடுரோட்டில் விளாசிய சிங்கப்பெண்..!
சம்பவ இடத்தை பார்வையிட்ட உதவி காவல் ஆணையர் விஜய் துல், வங்கியில் பணியாற்றும் ஒருவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். “வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உதவியோடு, கைதேர்ந்த திருடர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் இருந்து கைரேகைகள் உள்பட சில தடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இவை திருடர்களை கண்டுபிடிக்க உதவும்” என்றும் கூறினார்.
இதுதொடர்பாக 379 (திருட்டு) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இதேபோன்றதொரு சம்பவம் கான்பூரில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. 1997ஆம் ஆண்டு கோவிந்த் நகர் எஸ்பிஐ வங்கி கிளையில் 60 அடி தூரத்திற்கு சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, India