நாமக்கல்லில் தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க வந்த கோவையை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பயிற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தேக்வாண்டோ போட்டிகள் நடந்தன. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதற்காக அந்த பள்ளி வளாகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த போட்டியில் பங்கேற்க கோவையில் உள்ள தனியார் பள்ளியின் 16 வயது பிளஸ்-1 மாணவி தனது தந்தையுடன் வந்தார். பின்னர் மாணவியும், அவரது தந்தையும் தனித்தனி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாணவி ஒருவருடன் பயிற்சியாளராக அங்கோத்து லக்ஸ்மன் (வயது 24) என்பவர் வந்தார்.
இவர் கோவை பிளஸ் 1 மாணவியிடம் நீ அழகாக இருக்கிறாய், உனக்கு நன்கு பயிற்சி அளித்து அதிக பதக்கங்களை பெற வைக்கிறேன் என கூறியதாக தெரிகிறது. மேலும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே டிசம்பர் மாதம் 9-ந் தேதி இரவு 9 மணியளவில் தான் தங்கிருந்த விடுதியில் இருந்து, தந்தையை பார்க்க மாணவி சென்றார். அப்போது பயிற்சியாளர் அங்கோத்து லக்ஸ்மன் மாணவியின் கையை பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் தள்ளி தாக்கியதோடு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பயந்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் தாயார் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றார். அங்கு பரிசோதனையில் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது, தெலுங்கானா மாநில பயிற்சியாளர் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் தெலுங்கானாவை சேர்ந்த அங்கோத்து லக்ஸ்மன் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கோத்து லக்ஸ்மனனை கைது செய்த போலீசார், நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: ரவிச்சந்திரன், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Namakkal, Rape