சர்வதேச கடலில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை சரமாரி குண்டு மழை பொழிந்து விசாரணை என்ற பெயரில், 2 மணி நேரம் கட்டி வைத்து இரும்பு ராடால் அடித்து சித்திரவதை என மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால் இந்திய கடற்படையினர் மீது வேதாரண்யம் கடற்கரை காவல் நிலைய போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி, தரங்கம்பாடி, செருதூர் கிராமத்தை சேர்ந்த வீரவேல், செல்வகுமார், சுதீர் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 15ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில், இவர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் மன்னார் வளைகுடா பகுதியான சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய கடற்படை கப்பல் படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கப்பல் என தெரியாத தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை என நினைத்து படகை வேகமாக கரை நோக்கி செலுத்தியுள்ளனர்.
அப்போது சமிக்கைக்கு படகு நிற்காமல் சென்றதால், தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது இந்திய கடற்படை கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடற்படை சரமாரி குண்டு மழை பொழிந்ததால், படகில் இருந்த 10 மீனவர்களும் அச்சத்தில் உறைந்தனர்.
அப்போது இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற மீனவரின் தொடையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து படகை சுற்றி வளைத்த இந்திய கடற்படை வீரர்கள் விசைப்படகை நிறுத்தாத காரணத்திற்காக, படகில் இருந்த தமிழக மீனவர்கள் 10 பேரையும், கைகளை பின்னால் கட்டி இரும்பு ராடால் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.
இதன் பின்னர் குண்டு பாய்ந்த மீனவர் வீரவேலை ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு சென்ற இந்திய கடற்படை வீரர்கள் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே, குண்டடிபட்ட வீரவேல் என்ற மீனவரை தவிர்த்து விசைப்படகில் இருந்த தமிழக மீனவர்கள் 9 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு படகுடன் அழைத்து வரப்பட்டு பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த மீனவர்களின் உறவினர்கள், இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களால் தாக்கப்பட்ட 9, மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடுக்கடலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆவேசத்துடன் கூறிய தமிழக மீனவர்கள், “நாங்கள் அதிகாலை கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இந்திய கப்பல் என தங்களுக்கு தெரியாது. அதனை இலங்கை கப்பல் என நினைத்து அங்கிருந்து கரை நோக்கி வேகமாக சென்ற பொழுது தங்களின் விசைப்படகு மீது சுமார் 15 நிமிடம் குண்டு மழை பொழிந்ததை கண்டு அச்சத்தில் படகில் படுத்து கொண்டோம்,” என்றனர்.
இதையும் படிங்க : பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
மேலும், விசைப்படகில் ஏறிய இந்திய கடற்படை வீரர்கள் அனைவரையும் கட்டி வைத்து இரும்பு ராடால் அடித்து சித்திரவதை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விசைப்படகில் சிதறி கிடந்த குண்டுகளை ஆதாரமாக காண்பிக்கும் தமிழக மீனவர்கள், துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மீனவர் செல்வகுமார் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் கொலை முயற்சி, ஆயுதம் கொண்டு தாக்குதல், காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் indian arms act 27(1) துப்பாக்கி சூடு நடத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : பாலமுத்துமணி - நாகப்பட்டினம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fisherman, Gun fire, Indian Navy, Nagapattinam