முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / தீவு போல மாறிய சீர்காழி.. நீரில் மூழ்கிய நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை!

தீவு போல மாறிய சீர்காழி.. நீரில் மூழ்கிய நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை!

சீர்காழி கனமழை

சீர்காழி கனமழை

sirkazhi rain | மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் 50 சதவீத நிலங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Sirkali (Sirkazhi) | Tamil Nadu

சீர்காழியில் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக  தமிழகத்துக்கு 13ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தான் அதிகபட்சமாக  43.6 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சீர்காழி தாலுக்கா பகுதிகளில் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நான்காவது முறையாக நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. பூம்புகார் சுனாமி குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் உட்புகுந்துள்ளது.

இதையும் படிங்க | சென்னையில் மழைநீர் அகற்றும் பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

இதே போல சீர்காழி நகர் பகுதிகளான பாலசுப்ரமணியன் நகர், கல்யாணி சீனிவாசபுரம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி அருகே கதிராமங்கலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதி முழுவதும் கடல் போல் காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதே போல், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம் என அனைத்து வட்டாரங்களிலும் கன மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் சுமார் 50 சதவீத நிலங்கள் நீரால் சூழப்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: ராஜசேகர், சீர்காழி.

    First published:

    Tags: Heavy rain, Sirkazhi, Weather News in Tamil