முகப்பு /செய்தி /மதுரை / 16வயது பேத்தியை திருமணம் செய்ய முயன்ற தாத்தா.. அத்துமீறிய சித்தப்பா - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..

16வயது பேத்தியை திருமணம் செய்ய முயன்ற தாத்தா.. அத்துமீறிய சித்தப்பா - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : திருமங்கலம் அருகே பெற்ற மகளை முறை தவறி சித்தப்பாவிற்கு திருமணம் செய்து வைத்த தாய் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில் சாலையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முதியவரின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார்.  ஆண் வாரிசு இல்லாத முதியவர் ஏற்கனவே மனைவியும் இறந்து விட்டதால் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என முடிவு செய்தார். எனவே வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது மூத்த மகளிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு மூத்த மகள் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக தனது (16 வயது) மகளை திருமணம் செய்துகொள்ளலாம் என தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடத்த ஏற்பாடும் செய்தனர்.

இந்நிலையில், தாத்தாவை தனக்கு திருமணம் செய்ய முயற்சி செய்வதை அறிந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார். இதனால் தனது தாயின் தங்கை கணவரிடம் (சித்தப்பா) இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதற்கு சிறுமியின் சித்தப்பா உன்னை நான் காப்பாற்றுகிறேன் என கூறி சிறுமியிடம் அடிக்கடி அன்பாக பேசி பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் மீது ஆசை கொண்ட சித்தப்பா சிறுமியிடம் நெருங்கி பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலம் பல நாட்களாக இதேபோல் சிறுமியிடம் அத்துமீறினார். ஒரு கட்டத்தில் ஊரில் உள்ள வாழை தோப்புக்குள் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுமியின் தாய் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “இந்த விஷயம் வெளியில் தெரியவேண்டாம். உனக்கு ஒன்றரை லட்சம் தருகிறேன். சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடு. உங்களுக்கு ஆண் வாரிசு தானே வேண்டும். நானே ஆண் பிள்ளையை பெற்றெடுத்து உனது தந்தையிடம் கொடுத்து விடுகிறேன்” என கூறியுள்ளார்.

இதற்கு சிறுமியின் தாயும், தாத்தாவும் சம்மதித்துள்ளனர். அதன்படி ஒன்றரை லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு இருவருக்கும் வெளியூரில் சென்று திருமணம் செய்து வைத்தனர். மேலும் சிறுமியின் தாயும், தாத்தாவும் இந்த விஷயம் ஊருக்குள் தெரிந்தால் அவமானம் ஆகிவிடும். எனவே சிறுமி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடலாம் என கூறி சிறுமி மாயமானது தொடர்பாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பெற்ற தாயே திருமணம் செய்து வைத்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி போலீசார் சிறுமியை ஏமாற்றிய தாய், தாத்தா மற்றும் சிறுமியை திருமணம் செய்த சித்தப்பா உட்பட 3 பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  மேலும் 16 வயது சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர். பெற்ற தாயே தனது மகளுக்கு முறை தவறிய திருமணம் செய்து வைத்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சிவகுமார் தங்கையா - திருமங்கலம்

First published:

Tags: Crime News, Madurai