மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மதுரையில் ஆவின் பால் நிறுவனம் கொள்முதல் செய்யும் விலையை உயர்த்தக்கோரி இன்று முதல் பால் நிறுத்த போராட்டத்தை உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், போராட்டம் நடத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் மேலாளர் எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தை துவங்கியிருந்தனர். மதுரை ஆவின் நிறுவனத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 18,000 உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1.40 லட்சம் லிட்டர் பால் மற்றும் தேனி உள்ளிட்ட இதர ஒன்றியங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பால் என மொத்தம் 1.90 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஆவினுக்கு பால் வழங்கும் மதுரை மாவட்ட உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி 40 ரூபாயாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (மார்ச்.11) முதல் பால் நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் 1ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையிலும், அதன்பின்னர் ஆவின் மேலாளர் சாந்தி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். இந்த சூழலில், பால் நிறுத்த போராட்டம் நடத்தினால் கூட்டுறவு சட்ட விதிகளின் படி கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து ஆவின் மேலாளர் சாந்தி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்த பரிசீலனை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் நுகர்வோர் பாதிப்படையாமல் பாலை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த எச்சரிக்கையை மீறியும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை துவக்கியிருந்தனர்.
இதையும் படிங்க : இன்ஸ்டாவில் வேறு ஆணுடன் பேசிய காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பள்ளி மாணவன்
இதையடுத்து, பால் உற்பத்தியாளர்களை பெரும்பாலும் சமாதானப்படுத்தி உள்ளதாகவும், தேனி உள்ளிட்ட இதர யூனியங்களில் இருந்து பாலுக்கு மாற்று ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதனால் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மேலாளர் சாந்தி தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆவின் பொது மேலாளர் இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக தீர்வு காணப்பட்டதால் பால் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் வரும் மார்ச் 17ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aavin, Local News, Madurai, Protest