மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுகளுக்கு தகுத்திசான்றிதழ் வழங்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மதுரையில் ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள மாடுகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதற்காக மாவட்டம் முழுவதுமுள்ள கால்நடை மருத்துவமனைகளில் 100 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று மாட்டின் உரிமையாளர்கள் ஆர்வமாக அழைத்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?
மாடுகளின் உயரம், வயது, ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வழங்குகின்றனர். குறிப்பாக, நாட்டின காளைகளாக இருக்க வேண்டும், வயது 3 முதல் 8க்குள் இருக்க வேண்டும், உயரம் 120 செ.மீ. இக்கு மேல் இருக்க வேண்டும், முழு கண்பார்வை திறன் இருக்க வேண்டும், வெளிகாயங்கள் இருக்க கூடாது, வயிறு உபாதைகள் இருக்க கூடாது, சோர்வில்லாமல் உற்சாகமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பன போன்ற தகுதிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
கால்நடை மருத்துவர்கள் அளிக்கும் இந்த சான்றிதழை கொண்டு ஆன்லைன் வாயிலாக போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட மாடுகள் போட்டி நாளன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டு விளையாட அனுமதிக்கப்படும்.
போட்டியின் போது மாடுகளின் கொம்புகள் கூர்மையாக இருக்க கூடாது, மூக்கு, கண்ணில் மிளகாய், மூக்கு பொடிகள் எதுவும் தூவ கூடாது, திமிலில் செயற்கை பொடிகள் தூவ கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு மாட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alanganallur, Avaniyapuram, Jallikattu, Madurai, Palamedu, Pongal, Pongal 2023, Pongal festival, Tamil News