மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது ஐஸ்கிரீமில் தவளை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து 3 குழந்தைகளுக்கும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கடை உரிமையாளர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை TVS நகர் அருகே உள்ள கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்த அன்புச் செல்வம் - ஜானகிஸ்ரீ தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அதேபோல் அன்புச்செல்வத்தின் சகோதரர் தமிழரசன் - ரஞ்சிதா தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளனர். இவர்கள் நேற்று குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று காலை சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.
காலை 11 மணியளவில் அறநிலையத்துறை அலுவலகத்தில் எதிரே இருந்த மதுரை பேமஸ் ஜிகர்தண்டா என்ற பெயரில் துரைராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ஐஸ்கிரீம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். அதில் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது. இதை கண்ட குழந்தை தந்தை அன்பு செல்வத்திடம் கூறவே உடனடியாக அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தையை அருகில் இருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில் கோவில் எதிரே உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் தவளை உயிரிழந்த நிலையில் கிடந்த ஐஸ்கிரீமை உண்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அந்த கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் துரைராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திரையரங்குகளில் ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தை கொண்டு துரைராஜ் ஐஸ்கிரீம் தயார் செய்து கோன் ஐஸ் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் ஐஸ்க்ரீமை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். ஆய்வுக்கு பின்னரே முடிவுகள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: சிவக்குமார், திருப்பரங்குன்றம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ice cream, Local News, Madurai