பிரதமர் மோடியிடம் உரையாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது என மதுரை மாணவி தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் பரிச்சாப்பே சர்ச்சா என்ற திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லாமல் எவ்வாறு தேர்வில் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் 4ஆம் ஆண்டு பள்ளி பருவத் தேர்வின் கலந்துரையாடல் நிகழ்விற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்ட தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றனர். அதில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவி மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். அவரும் மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரி வித்தியாலய பள்ளி மாணவி அஷ்வினி.
12 ம் வகுப்பு படிக்கும் மாணவி அஸ்வினி மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரான சின்னச்சாமி - விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த மகளாவார். இந்நிலையில் மாணவி அஸ்வினியின் கேள்வியானது? மாணவர்களின் செயல்பாட்டில் பெற்றோர் எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என கேட்டிருந்தார்.
மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "கிரிக்கெட் போட்டியின்போது கிரிக்கெட் அரங்கிற்குள் இருக்கும் பார்வையாளர்கள் சிக்ஸர் அடிக்க வேண்டும்; ஃபோர் அடிக்க வேண்டும் என கூச்சலிடுவார்கள். ஆனால் களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன் அதை கண்டுகொள்ளாமல் பந்தில் கவனம் செலுத்துவார். அதேபோல் மாணவர்கள் ஒரே லட்சியத்தில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எண்ணமும் லட்சியமும் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். சுற்றி உள்ளவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை ஊக்கமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே. தவிர தடைகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாணவி அஸ்வினி பரிச்சாப்பே சர்ச்சா என்ற பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பில் தான் ஒருவர் மட்டுமே பங்கேற்றதாகவும் முதல் வாய்ப்பே தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் தனது கேள்விக்கு அளித்த பதில் உற்சாகத்தை கொடுப்பதாகவும் தனது வாழ்வின் லட்சியம் ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
செய்தியாளர்: சிவக்குமார், மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Narendra Modi, PM Modi