முகப்பு /செய்தி /Madurai / அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு...

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு...

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai HC Bench : ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, தமிழ் வழி இடஒதுக்கீட்டிற்கு முதுகலை கணிதத்தில்  மட்டும் தமிழ் வழியில் பயின்றால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த இரா.விநாயகமூர்த்தி,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ,

"நான் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை அறிவியல் ( M.Sc Maths ) வரை தமிழ் வழியில் பயின்றுள்ளேன். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 27/11/2019 ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற அரசு பாலிடெக்னிக்  கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் போட்டித்தேர்வில் ( 2017-18 ) கணித அறிவியல் பாடப் பிரிவில் கலந்துகொண்டு 11-12-2021 அன்று தேர்வெழுதினேன். மேலும் நான் தேர்வில் பெற்ற மதிப்பெண் 125 ஆகும் .

ஆசிரியர் தேர்வு வாரியம் 06-07-2022 அன்று வெளியிட்டுள்ள கணித தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் தமிழ் வழியில் பயின்றதற்கான இடஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ள அநேக தேர்வர்கள் முதுகலை கணிதத்தில்  மட்டும் தமிழ் வழியில் பயின்று தமிழ் வழி இடஒதுக்கீட்டில் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது PSTM ல் தேர்வு செய்யப்பட்டோர், இளங்கலை கணிதம் வரை ஆங்கில வழியில் பயின்றுள்ளனர்.  முதுகலையில் மட்டும் தான் தமிழ் வழியில் படித்து உள்ளனர். இவர்களைதான் PSTM தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தேர்வு செய்து உள்ளனர். ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் அரசாணை படி,   PSTM தமிழ் வழியில்  12ஆம் வகுப்பு முதல் இளங்கலை  மற்றும் முதுகலை வரை தமிழ் மொழியில் பயின்றவர்களைதான் தேர்வு செய்ய வேண்டும்.

இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே விண்ணப்பத்தில் பள்ளி இறுதி வகுப்பு. மேல் நிலைப் பள்ளிக் கல்வி , இளங்கலை அறிவியல் மற்றும் முதுகலை அறிவியல் ஆகியவற்றில் பயிற்று மொழி தமிழா?  ஆங்கிலமா?  என்ற விவரங்களை தேர்வு வாரியம் பெற்றுள்ளது. ஆனால்,  விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில் PSTM படித்தவர்களை தேர்வு செய்து தேர்வு பட்டியல் வெளியிடாமல், முதுகலை கணிதத்தில்  மட்டும் தமிழ் வழியில் பயின்று உள்ளனரா?  என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, தமிழ் வழி இடஒதுக்கீட்டிற்கு முதுகலை கணிதத்தில்  மட்டும் தமிழ் வழியில் பயின்றால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றியே தேர்வு செய்யப்பட்டோர்  பட்டியல் வெளியிட்டுள்ளது என தமிழ் வழி இடஒதுக்கீட்டை ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழில் பயின்றவருக்கே ஒதுக்கப்படும் என்பது தான் தமிழக அரசின் அரசாணை.

தமிழ் வழி இடஒதுக்கீடு என்பதே பயனற்றதாகும். எனவே,  அரசு பாலிடெக்னிக்  கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஜூலை 8 ம் தேதி வெளியிட்ட  தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.மேலும், PSTM தமிழ் வழியில்  1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, இளங்கலை மற்றும் முதுகலை வரை தமிழ் மொழியில் பயின்றவர்களை முறைப்படி தேர்வு செய்து புதிதாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டுயலை வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, 2 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

First published:

Tags: Madurai, Madurai High Court