பங்குனி மாத முதல் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பங்குனி மாத முதல் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7மணி முதல் மதியம் 11 மணி வரை பக்தர்கள் மலையேறி கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இரவில் தங்க தடை:-
வரும் 15ம் தேதி பிரதோஷத்தையொட்டி மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ச்சல் மற்றும் சளி இருமல் உள்ள பக்தர்களுக்கும் 10 வயதுக்குட்பட்ட மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோயிலுக்கு வர அனுமதி இல்லை. முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு நேரத்தில் பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் நீரோடைகளில் செல்லும் நீரில் குளிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.