விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அதிமுக பிரமுகர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 41). திருச்சுழியில் வசித்து வந்த இவர் அதிமுக முன்னாள் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவராக பொறுப்பு வகித்தவர்.இந்நிலையில் சத்தியமூர்த்தி மார்ச் 25 அன்று திருச்சுழி மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் உயிருக்கு போராடிய சத்தியமூர்த்தியை திருச்சுழி காவல்துறையினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 28-ம் தேதி சத்தியமூர்த்தி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் திருச்சுழி காவல்துறையினர் சத்தியமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பாறைகுளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில் செல்வகுமார் முன்பகை காரணமாக சத்தியமூர்த்தியை அரிவாளால் வெட்டியதை ஒத்துக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.