விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஆம்னி பேருந்து, கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பெண்கள் உட்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்தையன்(64) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அருப்புக்கோட்டைபுறவழிச்சாலை மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் லாரி கொண்டிருக்கும்போது திடீரென பஞ்சர் ஆனதால் லாரி ஓட்டுநர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே லாரியை ஓரமாக நிறுத்தி மாற்று டயர் மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து நின்றுகொண்டிருந்த லாரியில் பின்னால் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.அதே வேகத்தில் பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் பின்னால் அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டயர் மாட்டிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர் சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் ஆம்னி பேருந்து மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சையின் போது சிகிச்சை பலனின்றி ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.