விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் குடமுழுக்கு விழா பல ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பள்ளிமடம் கிராமத்தில் மிகவும் பழமையான அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. கோயிலில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கோயிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 21 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் பூஜிப்பதற்காக ராமேஸ்வரம் திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாக சாலை பூஜை, 3 காலமாக நடத்தப்பட்டது. கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவர் சொரிமுத்து அய்யனார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மங்கள வாத்தியம் இசைக்க, புனிதநீர் அடங்கிய குடங்கள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டது.
பின்னர் கோபுரத்தின் கீழே நின்ற பக்தர்கள் மீது கோபுர கலசத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.