விருதுநகர் பஜார் தெப்பக்குளம் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேற்கூரைகள் பறந்தன. மீட்புப் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. கோடை மழையினால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கன மழையில் பஜார் பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் தெப்பக்குளம் சுற்றியுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் மரம் சாய்ந்ததில் தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகின்றன.
மேலும், பலத்த காற்று வீசியதில் பொருள் காட்சியின் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. தெப்பக்குளத்தில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.