விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசியைச் சேர்ந்த பிரம்மன் என்பவருக்கு சொந்தமான விநாயகா பட்டாசு தொழிற்சாலை, சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு தொழிலாளர்கள் வேலை முடிந்து பேக்கிங் செய்யும் நேரத்தில் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரை மட்டமானது. இதில் அங்கு பணிபுரிந்த அமீர்பாளையத்தை சேர்ந்த கணேசன் (20) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கு பணிபுரிந்த அமீர் பாளையத்தைச் சேர்ந்த ராமர் (19) என்பவர் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.